வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள்... பழனி அருகே விவசாயிகள் 2 பேர் கைது...

பழனி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த விவசாயிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள்... பழனி அருகே விவசாயிகள் 2 பேர் கைது...

பழனி அருகே உள்ளது புதுக்கோட்டை கிராமம். இங்கு விவசாய தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயியான தங்கராஜ் என்பவரது தோட்டத்து வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக சத்திரப்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து பழனி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அவருடைய தோட்டத்து வீட்டில் 2 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது. இந்த துப்பாக்கிகளுக்கு எந்தவித உரிமமும் பெறவில்லை.

இதையடுத்து போலீசார் அங்கிருந்த தங்கராஜ், அவரின் உறவினரான கிருஷ்ணசாமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தோட்டத்துக்கு வரும் காட்டுப்பன்றிகள், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாட துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக திண்டுக்கல் பகுதியில் கொலை சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வரும் நிலையில், துப்பாக்கி பதுக்கப்பட்ட சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி அருகே தோட்டத்து வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.