சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள்...!!!
எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 17 கோடி மதிப்புள்ள 8 கிலோ 96 கிராம் போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அதே நேரத்தில் எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
அப்போது மும்பையை சேர்ந்த 30 வயது வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்தனர் புலனாய்வு அதிகாரிகள். அந்த சூட்கேசில் போதை பவுடர் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 17 கோடி மதிப்புள்ள 8 கிலோ 96 கிராம் அம்பெட்டமின் என்ற போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.
இவற்றை கடத்தி மும்பை வாலிபரை கைது செய்த அதிகாரிகள் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரித்து வருகின்றனர்.