ரசாயனங்கள் தடவி விற்கப்படும் பழங்கள்... ரசாயனம் தடவிய 15 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்...
சென்னை கோயம்பேட்டில், ரசாயனங்கள் தடவி பழுக்க வைக்கப்பட்ட சுமார் 15 டன் வாழைப்பழங்கள் உணவு பாதுகாப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
விழா காலங்களில், பழங்களை விரைந்து பழுக்க வைக்க, அவற்றின் மீது ரசாயனங்கள் தடவப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று அதிகாலை கோயம்பேடு கனி வணிக வளாகத்தில் சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பழக்கடைகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தபோது, ரசாயனம் தடவிய வாழைப்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுமார் 15 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 45 கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சதீஷ் குமார், ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் கேன்சர் நோய் பாதிப்பு ஏற்படும் என கூறினார். எனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதுகுறித்து கோயம்பேடு கனி வணிக வளாகத்தில் உள்ள சங்க நிர்வாகிகளுடன் பேசியதாகவும், இதுபோன்று செயல்களில் ஈடுபட மாட்டோம் என வியாபாரிகள் உறுதி தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.