1 டைம் யூஸ் லைட்டர்...இறக்குமதியை மத்திய அரசு தடை செய்யுமா? வைகோ கேள்விக்கு...பதிலளித்த அமைச்சர்!

1 டைம் யூஸ் லைட்டர்...இறக்குமதியை மத்திய அரசு தடை செய்யுமா? வைகோ கேள்விக்கு...பதிலளித்த அமைச்சர்!

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை மத்திய  அரசு தடை செய்யுமா? என்று கேள்வி எழுப்பிய மதிமுக தலைவர் வைகோவுக்கு மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

இறக்குமதியை மத்திய அரசு தடை செய்யுமா?:

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்யுமா? என்று மதிமுக தலைவர் வைகோ, கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திருமதி. அனுப்பிரியா படேல் பதிலளித்தார். இதுகுறித்து வைகோ கேட்ட கேள்வியையும், அதற்கு அமைச்சர் அளித்த பதில்களையும் இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்...

வைகோ கேட்ட கேள்விகள்:

கேள்வி எண். 378

(அ) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதை உடனடியாக தடை செய்யுமாறு அமைச்சகத்தை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரிடமிருந்து கடிதம் ஏதும் பெறப்பட்டதா?

(ஆ) அப்படியானால், அரசின் பதில் என்ன?

(இ) சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்பூர்வமாக அல்லது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதால், தீப்பெட்டித் தொழில் அதன் உள்நாட்டுச் சந்தையை இழக்கிறது என்பதை அரசு அறிந்திருக்கிறதா?

(ஈ) தமிழ்நாட்டின் தென்பகுதியில் வேலைவாய்ப்பைத் தரும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

இவ்வாறு நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ தனது கேள்விகளை முன்வைத்தார்.

இதையும் படிக்க: வைகோ கேட்ட கேள்வியும்...மத்திய அமைச்சர் அளித்த பதில்களும்...!

அமைச்சரின் பதில்:

(அ): ஆம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதை உடனடியாகத் தடை செய்யக் கோரி தமிழக முதலமைச்சரிடமிருந்து 08.09.2022 அன்று கடிதம் வந்துள்ளது.

(ஆ) முதல் (ஈ): சிகரெட் லைட்டர்களுக்கான கட்டாய இந்திய தரநிலைகளை அறிவிப்பதற்காக, இந்திய தரநிலைகளின் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் ஆராயப்பட்டது. மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்யும் போது, சட்டவிரோத இறக்குமதி, குறைவான விலைப்பட்டியல் மற்றும் தவறான அறிவிப்பு ஆகியவற்றை சரிபார்க்க வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இவ்வாறு மதிமுக தலைவர் வைகோ கேட்ட கேள்விக்கு அமைச்சர் அனுப்பிரியா படேல் பதிலளித்தார்.