ஒருதலை காதலால் விபரீதம்.. இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த கொடூர பின்னணி

ஒரு தலைக் காதலால், வாலிபரின் தலையை துண்டித்து படுகொலை செய்த கொடூர சம்பவம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்துள்ளது. கொலை நடந்த 4 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரின் அதிரடி நடவடிக்கையைத்தான் இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

ஒருதலை காதலால் விபரீதம்..  இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த கொடூர பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன்.  இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.  வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்தபோது, கடைக்கு வந்த மர்ம நபர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி, தான் கொண்டு வந்த கத்தியால் சூரிய ராகவன் தலையை துண்டித்து தப்பியோடிவிட்டார். இந்த கொடூர கொலை குறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், சூரிய ராகவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சூரிய ராகவனை கொலை செய்து விட்டு தப்பியோடியது சோழபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது. சூரிய ராகவனுக்கும், படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த மகாலெட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதே இந்த படுகொலைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. பட்டதாரியான மகாலெட்சுமி, சூரிய ராகவன் கடையின் அருகேயுள்ள டைப்பிஸ்ட் இன்ஸ்டியூட்டிற்கு வந்த போது பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவாகரம் இரு வீட்டருக்கும் தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்பது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையில் பெற்றோர்களின் எதிர்ப்பினையும் மீறி சூரிய ராகவன், மகாலெட்சுமி இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  சூரிய ராகவனை கொலை செய்த சோழபுரத்தினை சேர்ந்த ஆனந்தராஜ் கேட்டரிங் முடித்து விட்டு, விழாக்களுக்கு சமையல் செய்வது, கோவில் திருவிழாக்களில் ஆடு வெட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.

சூரிய ராகவன், மகாலெட்சுமியை காதலிக்கும்போது, ஆனந்தராஜும் மகாலெட்சுமியை காதலித்துள்ளார். ஆனால் மகாலெட்சுமி தான் சூரிய ராகவனை காதலிப்பதாக தெரிவித்துவிட்டார். ஒரே சமூகத்தை சேர்ந்த தன்னை காதலிக்காமல் மற்றொரு சமூகத்தை சேர்ந்த சூரிய ராகவனை காதலித்து வந்ததால், ஆனந்த்ராஜ்க்கு மகாலெட்சுமி மற்றும் சூரிய ராகவன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் சூரிய ராகவன் மற்றும் மகாலெட்சுமி இருவரும் திருமணம் செய்து கொண்டது ஆனந்தராஜ்க்கும் மேலும் ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தன் காதலித்த பெண்ணை திருமணம் செய்த சூரிய ராகவனை கொலை செய்ய வேண்டும் என்று ஆனந்தராஜ் திட்டம் திட்டியுள்ளார்.

இந்த திட்டத்தின்படிதான் சூரியராகவன் தலையை துண்டித்துள்ளார் ஆன்ந்தராஜ் தலையை மட்டும் கையில் பிடித்தாவறு சுற்றி பார்த்து விட்டு அருகில் வீசி விட்டு தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஆனந்த்ராஜை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதல் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த 4 மணிநேரத்தில் போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளது குறிப்பிடதக்கது.