தீரன் பட கார்த்தி ஸ்டைலில் வடமாநில கொள்ளையர்களை வடமாநிலத்திற்கே சென்று பிடித்த தமிழக போலீசார்.! 

தீரன் பட கார்த்தி ஸ்டைலில் வடமாநில கொள்ளையர்களை வடமாநிலத்திற்கே சென்று பிடித்த தமிழக போலீசார்.! 

தீரன் பட பாணியில் வடமாநில கொள்ளையர்களை வடமாநிலத்திற்கே சென்று பிடித்த தமிழக காவல்துறையினரின் செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.  

தமிழக காவல்துறைக்கு ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல என்று சொல்லும் அளவுக்கு எவ்வளவு இக்கட்டான வழக்காக இருந்தாலும்  களத்தில் இறங்கி தட்டி தூக்கிவிடுவர். இந்நிலையில் தான் அவர்களுக்கு புதிய சவாலாக வந்தது,  பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் கொள்ளை. இதனை தீரன் பட பாணியில் பல இடையூறுகளை கடந்து தமிழக போலீசார் வட மாநில கொள்ளையர்களை சாதுர்யமாக செயல்பட்டு தங்களின் வலையில் சிக்க வைத்துள்ளனர். 

ஹரியானாவில் இருந்து சௌகத் அலி மற்றும் சஹதப் கான் ஆகிய இருவரின் தலைமையின் கீழ் 8 பேர் கொண்ட 4 குழுக்கள் விமான மூலம் தமிழகத்துக்குள் வந்துள்ளனர். இதனையடுத்து பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்-ஐ  குறிவைத்து ஜூன் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை திருவண்ணாமலை, சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளனர்.  வந்த வேலை சிறப்பாக முடிந்ததால் மீண்டும் 19  ஆம் தேதி விமானம் மூலம் சிட்டாக ஹரியானவுக்கு பறந்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் மட்டும் அதிகப்படியாக 9 இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், சென்னை காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது.  இதனையடுத்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் ஹரியானாவை சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது. 

அதன் பின்னரே தியாகராய நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் ஹரியானாவில் உள்ள மேவாட் பகுதிக்கு விரைந்தனர். கொள்ளையர்களின் அடையாளம் தெரிந்திருந்த நிலையில் அங்குள்ள ஹரியானா சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் தனிப்படையினரும் சேர்ந்து சுமார் 200 போலீசார் கொள்ளைக் கூட்டத்தின் கூடாரமான மேவாட் பகுதியை சுற்றிவளைத்து சோதனையிட முயன்றனர்.  ஆனால் தீரன் படத்தில் கார்த்தி எப்படி படையுடன் சென்று ஊர் மக்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்குவாரோ அதேபோல் தமிழக காவல்துறையும் இரண்டு முறை பின்னடைவை சந்தித்தது. 

இதனையடுத்து சாதுர்யமாக செயல்பட்டு ஜூன் 23 ஆம் தேதி கொள்ளையர்களுள் ஒருவரான எம். காம் பட்டதாரி அமிர் அர்ஷ் கூடாரத்தை விட்டு வெளியே வந்த போது கோழி அமுக்குவது போன்று போலீசார் அமுக்கினர். 

அவனிடம் நடத்திய விசாரணையில் வீரேந்தர் ராவத் என்ற கொள்ளையன்  குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த  வீரேந்தர் ராவத்தின் செல்போன் எண்ணை வைத்து தங்கள் பொறியில்  போலீசார் சிக்க வைத்தனர்.  பின்னர் அவனிடம்  நடத்திய விசாரணையில் அமீர் அர்ஷ், வீரேந்தர் ராவத் உள்ளிட்டோருக்கு  சஹதப் கான் தான் தலைவனாக செயல்பட்டுள்ளான் என்பது தெரிய வந்தது. மேலும் நஜிம் ஹுசைன் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய இரு குழுவினருக்கு சௌக்கத் அலி என்பவன் தலைவனாக செயல்பட்டது  தெரியவந்தது.

அதனையடுத்து இதே பாணியில் அதிரடி காட்டிய தனிப்படை போலீசார் நஜிம் ஹுசைனையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவல்களை கொண்டு நஜீம் ஹுசைன் உடன் வந்த கொள்ளையர்களின் குழுவுக்கு தலைவனாக செயல்பட்ட சௌக்கத் அலியை தனிப்படை  கைது செய்துள்ளனர். 

இதனை தொடர்ந்து மற்றொரு தலைவனான சஹதப் கானை வேட்டையாட ராஜஸ்தான் மாநிலத்துக்கு தனிப்படை போலீசார் புறப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கொள்ளையடித்த பணம் அனைத்தையும் ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழவே பயன்படுத்தியதாகவும், தங்களிடம் எந்த பணமும் தற்போது இல்லை எனவும் கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.. 2 மாதம் ஜெயில் பின்னர் பெயில் என சாதாரணமாக கூறும் கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ஒரு  கோடி பணத்தை  மீட்பது எப்படி என தமிழக காவல்துறை ஆலோசித்து  வருகிறது.