பணி நிரந்தரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீமான்!தமிழக அரசிடம் வலியுறுத்தியது என்ன?

பணி நிரந்தரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீமான்!தமிழக அரசிடம் வலியுறுத்தியது என்ன?
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம்:

அந்த அறிக்கையில், தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளது தமிழ்நாட்டிற்கே ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமும், தலைகுனிவும் ஆகும். பல ஆண்டுகளாகப் போராடியும் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றித் தராமல் ஏமாற்றி வரும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தை ஆதரிக்கும் நாம் தமிழர் கட்சி:

மின்வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்படப் பல கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், அவர்கள் கோரிக்கைகள் மிக மிக நியாயமானது என்பதை உணர்ந்து, நாம் தமிழர் கட்சி அவர்களது போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது ஏன்?:

கடந்த 1997ஆம் ஆண்டு முதல், முறையான ஊதியமின்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக மின்சார வாரியத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி காலியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அந்த இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிநியமனம் செய்யாது, தமிழ்நாடு அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

சிறிதும் அறமற்றச் செயல்:

மின்பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு, புதிய மின்மாற்றிகள் நிறுவுதல், மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகளில் அதிக அளவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய கடினமான உடல் உழைப்பு பணிகளை மேற்கொள்ளும்போது அதிகமான விபத்துக்களிலும் சிக்கிக்கொள்கின்றனர். தற்காலிக ஊழியர்கள் என்பதால் விபத்து காப்பீடும் இல்லாததால் உரிய இழப்பீடும் பெறமுடியாதவர்களாய் துயரம் அடைகின்றனர். இருப்பினும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் தொடர்ந்து பல நாட்கள் ஓய்வின்றி உழைத்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் தமிழ்நாடு அரசு அலட்சியம் செய்து வருவது சிறிதும் அறமற்றச் செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசை வலியுறுத்திய சீமான்:

ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாது தங்களது வாழ்வாதார மீட்சிக்காக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளான, 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்தபடி ஒருநாள் ஊதியமாக ரூ.380-ம், விழாக்கால ஊக்கத்தொகையையும் வழங்கிட வேண்டுமெனவும், முறையான விபத்து காப்பீடும் ஏற்படுத்தித்தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை சீமான் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com