சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் நிரந்தரமல்ல...முதலில் எம்.ஜி.ஆர்...பிறகு ரஜினிகாந்த்...இப்போ...சீமான் பரபரப்பு அறிக்கை!

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் நிரந்தரமல்ல...முதலில் எம்.ஜி.ஆர்...பிறகு ரஜினிகாந்த்...இப்போ...சீமான் பரபரப்பு அறிக்கை!

திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட முனைவதா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சினித்துறையில் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரம் இல்லை:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல; ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.

இதையும் படிக்க: கடிதத்தை இரண்டு முறை திருப்பி அனுப்பிய அதிமுக...இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரந்த தகவல்..!யார் அனுப்பியது தெரியுமா?

அத்துமீறி நுழைந்து தாக்குதல்:

தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக் காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழத்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ஐயா ரஜினிகாந்த் அவர்கள் திரைத்திரையில் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின், தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக தம்பி விஜய் அவர்கள் உச்சத்தில் இருக்கிறார். இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான சகோதரர் பிஸ்மி அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த திரு.ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று.

ஒருமையில் பேசி மிரட்டிய ரஜினிகாந்த் ரசிகர்கள்:

ஐயா ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால் அப்படியானவர்களில் சிலரே, மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று, ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது. இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஐயா ரஜினிகாந்த் அவர்களே இதனை விரும்பமாட்டார்கள். இத்தகைய செயல்களானது ஐயா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென்று தனது அறிக்கையில் சீமான் வலியுறுத்தியுள்ளார்.