வராங்க...சாப்பிடுறாங்க...காசு போடுறாங்க...ஆனா காசு காணோம் - ”QR Code” மீது ஸ்டிக்கர் ஒட்டி நூதன மோசடி!!

வராங்க...சாப்பிடுறாங்க...காசு போடுறாங்க...ஆனா காசு காணோம் - ”QR Code”  மீது ஸ்டிக்கர் ஒட்டி நூதன மோசடி!!

திருப்பூரில் உள்ள கடைகளில் மின்னனு பரிவர்த்தனையை பயன்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர். 

கொரோனா பாதிப்பு உருவாக்கிய பல்வேறு மாற்றங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையும் ஒன்று. கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாகவோ, ஏடிஎம் கார்டுகள் மூலமாக முன்பெல்லாம் பணம் செலுத்தி வந்த மக்களில் பலர், கூகுள் பே, ஃபோன் பே என டிஜிட்டல் முறைக்கு தற்போது மாறியுள்ளனர். 

இதன்காரணமாக, பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக செல்போனில் ஸ்கேன் செய்ய கடைகள் முன்பு சுவற்றிலும், தள்ளுவண்டிகளிலும் க்யூ ஆர்’ ஸ்டிக்கரை ஒட்டி உள்ளனர். சமீபத்தில் திருப்பூரின் பல இடங்களில் உள்ள கடைகளில் பணப்பரிவர்த்தனைக்காக ஒட்டப்படும் ‘க்யூ ஆர்’ ஸ்டிக்கர் மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் போலியான ஸ்டிக்கர் ஒட்டி நுாதன முறையில் திருடுவதாக போலீசாருக்கு புகார் வர துவங்கியுள்ளது.

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்தவர் துரைசாமி ஓட்டல் மற்றும் ‘பாஸ்ட் புட்’ கடை நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு சாப்பிட சென்ற ஒருவர் சாப்பிட்டு விட்டு அங்கு ஒட்டியிருந்த, ‘க்யூ ஆர்’ கோடை ஸ்கேன் செய்து, பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் துரைசாமியின் வங்கி கணக்குக்கு பணம் செல்லவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்தவர் நெட்வொர்க் பிரச்சனையாக இருக்கும் அதனால் மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்யுங்கள் என வாடிக்கையாளரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து வாடிக்கையாளர் மீண்டும்  ‘ஸ்கேன்’ செய்த போது, ‘க்யூ ஆர்’ கோடில் ஓட்டல் பெயரில்லாமல் வேறு ஒருவரின் பெயர் வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த துரை சாமி வங்கி மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த பிறகு, கடையில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை துரைசாமி பார்த்தார். 

அதில் க்யூ ஆர்’ ஸ்டிக்கரின் மேல் வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கடையில் இருந்த ‘சிசிடிவி’ கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் ஒருவர்  ‘ஸ்டிக்கர்’ மீது, இன்னொரு ’க்யூ ஆர்’  ஸ்டிக்கரை வெட்டி ஒட்டி செல்வது தெரிந்தது. இதே போன்று அருகே உள்ள மற்றொரு உணவகம், ஒர்க்ஷாப், மளிகை கடை என, முதலிபாளையம் சிட்கோவில் உள்ள பெரும்பாலான கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்தனர்.

அண்மையில் சென்னை அடுத்த கந்தன் சாவடியில் இதேபோன்று QR code மோசடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது இதே பாணியில் மர்மநபர்கள் QR code மோசடியில் ஈடுபட்டுள்ளது, அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் நுட்பம் வளர வளர நாடு எந்த அளவிற்கு வளர்ச்சியை நோக்கி செல்கிறதோ அதேபோன்று திருட்டு சம்பவங்களும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே செல்வதுதான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, பணம் வசூலிக்கப் பயன்படுத்தப்படும் QR Code-ஐ கடைக்கு வெளியில் ஒட்ட வேண்டாமென வணிகர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.