24 மணி நேரம் காலவகாசம்...திராணி இருந்தால் என்மீது கை வையுங்கள்...திமுக அரசுக்கு அண்ணாமலை சவால்!

24 மணி நேரம் காலவகாசம்...திராணி இருந்தால் என்மீது கை வையுங்கள்...திமுக அரசுக்கு அண்ணாமலை சவால்!

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் சவால் விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், நேற்றைய தினம் வடமாநிலத்தவர்கள் படையெடுத்து ரயில் நிலையங்களில் குவிந்ததால், மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோ பொய்யானது என்று டிஜிபி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் மறுத்து வந்தனர், தொடர்ந்து, முதலமைச்சரும் இச்செய்திக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு படையெடுப்பதற்கு காரணம் திமுக தான் என்றும், அவர்களின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டமும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பேசி வருவதும் தான் காரணம் என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையும் படிக்க : North Indians பீதியடைய வேண்டாம்...ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!

ஆனால், இது குறித்து வட மாநிலத்தவர்கள் சிலர் நாங்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்புடன் தான் இருக்கிறோம், எங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை, நாங்கள் ஹோலி பண்டிகையையொட்டி ஊருக்கு செல்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக  அண்ணாமலை வெளியிட்டு இருந்த அறிக்கையில், தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துகள் இடம்பெற்று இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த திமுகவின் வெறுப்பு பிரச்சாரங்களை தற்போது காணொளியாகவும் வெளியிட்டு உள்ளேன், திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்றூ கூறியுள்ள அண்ணாமலை,  பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று திமுக எண்ணுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணிநேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள் என திமுகவுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.