அரசியல், மதம், ஜாதி... பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது... மதுவந்திக்கு ஆதரவாக களமிறங்கிய பேரரசு!! 

அரசியல், மதம், ஜாதி... பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது... மதுவந்திக்கு ஆதரவாக களமிறங்கிய பேரரசு!! 

சென்னை கே.கே.நகரில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தயார் உருவாக்கிய பத்ம சேஷாத்ரி பால பவன் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவன், தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது  ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு மாணவிகள் முன்பாக வந்து நிற்பது, ஆபாச மெசேஜ் அனுப்புவது என பல்வேறு புகார்களுக்கு உள்ளானவர் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன். சமூக வலைத்தளங்கள் வரை இந்த பிரச்சினை வெளியானதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர். 

சமூகவலைத்தளங்களில் பலரும் கொந்தளித்த நிலையில் வீடியோ வெளியிட்ட ஒய்.ஜி.மகேந்திரனின் 
 மகள் மதுவந்தி, சிலர் எங்கள் சாதியை இழுக்கிறார்கள். என்னை பொறுத்தவரை தவறு செய்தவர் தனிப்பட்ட நபர். அவர்மீது, சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு இன்னும் நிரூபணம் ஆகவில்லை. இதில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர் என சாதி, மதத்தை கொண்டுவந்து அரசியல் பண்ணக் கூடாது. இதனை எக்காரணம் கொண்டும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். சாதி, மதத்தை உள்ளே கொண்டு வந்து அரசியல் பேசும் கோமாளிகளை கேள்வி கேட்கத்தான் செய்வேன். இந்தக் கோமாளிகள் அடக்கிக்கொள்ளவேண்டும். என ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் மதுவந்தியின் வீடியோ பேச்சுக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த இயக்குனர் பேரரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள்.

சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது. இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர். சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக கொடுக்கும் குரலில் தாயின்குரல், தந்தையின்குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.

உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகததின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்.

இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம்". இவ்வாறு பேரரசு தெரிவித்துள்ளார்.