ஏன் அக்னிபாத்... வெளியில் வரும்போது 11 லட்சமா... மத்திய அரசு கூறுவதென்ன?!!

ஏன் அக்னிபாத்... வெளியில் வரும்போது 11 லட்சமா... மத்திய அரசு கூறுவதென்ன?!!

ராணுவ ஆள்சேர்ப்புக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்துள்ளது.

ஏன் அக்னிபாத்?:

அக்னிபாத் திட்டம் என்பது காலத்தின் தேவை எனவும் இந்தியா முழுவதும் பருவநிலை மாற்றம் இருப்பதால் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப ராணுவத்திலும் மாற்றங்கள் அவசியம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதை ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் எனவும் அக்னிபாத் ஒரு தனியான திட்டம் அல்ல எனவும் கூறியிருந்தது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம்.  

2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவை பாதுகாப்பாகவும் வலுவாகவும் மாற்றுவது என்பது அவரது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று எனக் கூறிய பாதுகாப்பு துறை அதன் ஒரு பகுதிதான் இந்தத் திட்டம் எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இராணுவத்திற்கு பலன் என்ன?:

பாதுகாப்பு துறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது எனவும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்வெளி சக்தியிலும் நாம் பெரும் வெற்றியை அடைந்துள்ளோம் என கூறியுள்ள மத்திய அரசு அதை மேலும் திறம்படச் செய்ய, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிகம் தேவைப்படுவார்கள் எனக் கூறியுள்ளது.  

அக்னிபாத் திட்டம் இதன் ஒரு பகுதி எனக் கூறியுள்ள அமைச்சகம் இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப இளைஞர்களை இணைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. 

நான்கு வருடங்களுக்கு பிறகு?:

அக்னிவீரர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது எல்லா இடங்களிலும் முன்னணியில் இருப்பார்கள் எனவும் அவர்களுக்கு எந்த வழியும் மூடப்படவில்லை எனவும் அவர்கள் வேலையிலிருந்து செல்லும் போது சுமார் 11 லட்சம் ரூபாய் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.  அவர்கள் விரும்பினால், அவர்கள் படிக்கலாம், எந்த வியாபாரமும் செய்யலாம் எனவும் விள்ளமளிக்கப்பட்டுள்ளது.  

முந்தைய காலம் வேறு எனவும் அந்த காலத்தில், ஓய்வு பெற்ற பிறகு, இராணுவ வீரர்கள் அவர்களது கிராமத்திற்குச் சென்று அங்குள்ள அவர்களது நிலத்தில் உணவு பயிரிட்டு, மீதமுள்ள செலவுகளுக்கு ஓய்வூதியத்தை பயன்படுத்தினர் எனக் கூறியுள்ள அமைச்சகம் இன்று அந்த நிலைமைகள் இல்லை எனவும் கூறியுள்ளது.

பயன் என்ன?:

திறமையும் பயிற்சியும் பெற்றவராக இருப்பார்கள் எனவும் அவர் ஒரு சாதாரண குடிமகனை விட சமூகத்திற்கு நிறைய பங்களிக்க முடியும் எனவும் பாதுகாப்பு துறை கூறியுள்ளது.  முதல் அக்னிவீரன் ஓய்வு பெறும் போது அவருக்கு 25 வயது இருக்கும் எனவும் அப்போது இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.  வேகமாக வளரும் பொருளாதாரத்திற்கு இப்படிப்பட்ட வீரர்கள் தேவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீர்ப்பு:

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  இந்த திட்டத்தை தடைசெய்ய எந்த காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2000... எதற்காக?!!