தமிழ்நாட்டில் விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகள்...!!!!!மக்கள் கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்படுமா!!!!

தமிழ்நாட்டில் விதிகளை மீறி  செயல்படும் சுங்கச்சாவடிகள்...!!!!!மக்கள் கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்படுமா!!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் சுங்க கட்டணங்களை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  ஆண்டுதோறும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் இரண்டுமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.  

தமிழகத்தில் சுங்கசாவடிகள்:

தமிழகத்தில் 5285 கிலோமீட்டர் நீளமான தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 48 சுங்கசாவடிகள் இதுவரை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 சுங்கசாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள சுங்கசாவடிகளுக்கு கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு:

கார் மற்றும் ஜீப்களுக்கு கூடுதலாக ரூ.10ம், பஸ் மற்றும் லாரிகளுக்குக் ரூ.20 முதல் ரூ.30 வரையும் கனரக வாகனங்களுக்கு கூடுதலாக ரூ.150யும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுங்கசாவடி விதிமுறைகள்:

தேசிய நெடுஞ்சாலைகள் விதிகள் 2008ன் படி மாநகராட்சி மற்றும் நகராட்சியின் 10 கிலோமீட்டர் வரம்புக்குள் சுங்கசாவடி அமைக்கப்படக்கூடாது.  இந்த விதிமுறைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் பல சுங்கசாவடிகள் இயங்கி வருவதாக தமிழக அரசு சார்பில் மத்திய நெடுஞ்சாலை துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அதைப்போல 60 கிலோமீட்டருக்குள் ஒரே திசையில் ஒரே வட்டாரத்துக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கசாவடி அமைக்க கூடாது எனவும் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

சுங்கசாவடி விதிவிலக்குகள்:

மாநகராட்சி மற்றும் நகராட்சியின் 10 கிலோமீட்டர் வரம்புக்குள் சுங்கசாவடி அமைக்கப்பட்டால் அவை சில விதிவிலக்குகளால் அமைக்கப்படலாம் என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  பொருத்தமான நிலம், போக்குவரத்து ஆய்வுகள், தள நிலைமைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சில சுங்கசாவடிகளுக்கு விதி விலக்குகள் வழங்கப்படலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

சுங்கசாவடி கேள்விகளும் குழப்பமான பதிலும்:

தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சரிடம் பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு சார்பாக அதிக முறை சுங்கசாவடிகள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் சுங்க சாவடி விதிமுறைகளுக்கு எதிராக ஏதேனும் சுங்கசாவடிகள் செயல்படுகின்றனவா என்ற கேள்விக்கு பிப்ரவரி மாதம் 12 சுங்கசாவடிகள் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுகின்றன எனவும் மார்ச் மாதம் அவ்வாறு எந்த சுங்க சாவடிகளும் செயல்படவில்லை எனவும் ஜுலை 21 அன்று 16 சுங்கசாவடிகள் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுகின்றன எனவும் அதே மாதம் 28 அன்று தமிழ்நாட்டில் விதிமுறைகளுக்கு மாற்றாக எந்த சுங்கசாவடியும் செயல்படவில்லை எனவும் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார்.

சுங்கசாவடி கட்டண வருவாய்:

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட பல சுங்கசாவடிகளில் வருவாயை விட அதை அமைக்க செலவழிக்கப்பட்ட தொகை அதிகமாக உள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது.  உதாரணமாக பாண்டிச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொரட்டாண்டி சுங்கசாவடி அமைக்க செலவழிக்கப்பட்ட தொகை ரூபாய் 285 கோடி ஆனால் இதுவரை அதிலிருந்து பெறப்பட்ட தொகை ரூபாய் 142 கோடி மட்டுமே.  இதுபோல பல சுங்கசாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புகள்:

'தமிழகத்தில் விதிகளை மீறி சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன' என சிதம்பரம் தொகுதி எம்பியான தொல். திருமாவளவன் மக்களவையில் பேசியுள்ளார்.

”தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அத்துடன் நிதி நெருக்கடி உள்ள நிலையில் இந்த சுங்க கட்டண உயர்வு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. மேலும் சரக்கு வாகனங்களின் வாடகையும் மறைமுகமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்” என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

”நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 1,51,019 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன; இந்த நெடுஞ் சாலைகளில் 566 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 5134 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.இந்தச் சுங்கச் சாவடிகள் வழியாக தினசரி சராசரியாக 64.50 லட்சம் வாகனங்கள் பயணித்து ரூ.135 கோடி வாகன உபயோகிப்பாளர் கட்டணம் அன்றாடம் வசூலிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் சுங்கச்சாவடிகளில் வாகன உபயோகிப்பாளர் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ”என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த கட்டண உயர்வு தற்போதைய கட்டணத்தை விட 15 சதவிகிதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. 60 கி.மீ இடைவெளியில் டோல்கேட் எதுவும் அமைக்கக் கூடாது என தேசிய நெடுஞ்சாலைத் துறை விதிகளில் உள்ளது. தமிழகத்தில் 60 கி.மீ இடைவெளி தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள 22 சுங்கச் சாவடிகள் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்கத்தால் அடையாளம் காணப்பட்டு 3 மாத கால அவகாசத்தில் இவை அகற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவிப்பு செய்து சுமார் 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”  எனவும் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

நிதின் கட்காரியின் பதில்:

”தேசிய நெடுஞ்சாலை விதிகள் 2008 சட்டப்படி 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்கலாம். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும் சுங்கச்சாவடிகள் மூடப்படும்.”  என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மக்கள் சார்பான கோரிக்கைகள்:

”மத்திய அமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் மூடப்படும்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்படாமல், இப்போதுள்ள சுங்கக்கட்டணமே நீடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அதுதான் சுங்கச்சாவடி சீர்திருத்தத்தின் பயன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும்" என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

”மத்திய அமைச்சரின் அறிவிப்பின்படி சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், சுங்கச் சாவடி கூடுதல் கட்டண உயர்வு மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.”என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் கூறியுள்ளார்.

மேலும்”ஒவ்வொரு புதிய வாகனத்திற்கும் ஆயுட்கால சாலை வரி அரசுக்கு செலுத்தப்படுகிறது. எனவே, சுங்கச்சாவடிகளில், வாகனத்திற்கு ஒவ்வொரு முறையும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமாகாது. தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளும் பயணப் போக்குவரத்து ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான செலவைக் கொண்டு வருகிறது.எனவே சாலைகள் அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட கால வரம்பிற்குப் பின், சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;

அத்துடன் செயல்பட்டு வரும் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும், சுங்கச்சாவடி ஆரம்பிக்கப்பட்ட வருடம், எத்தனை ஆண்டுகளாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது மற்றும் இந்த வழித்தடத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சுங்கங்கட்டணம் வசூலிக்கப்படும் போன்ற விபரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக சுங்கச்சாவடிகளில் போர்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வருடாந்திர வாகன உபயோகிப்பாளர் கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு விதிமுறை மீறல்..!!!!