இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்...கல்வியைத் தொடர முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும்!
இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் கல்வியைத் தொடர, முதலமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நீடித்து வரும் நிலையில், ஆப்ரேஷன் அஜய் மூலம் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு முன்னெடுத்தது. அதன்படி, 212 பேர் இஸ்ரேலில் இருந்து இன்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து அங்கு ஓய்வெடுத்துவிட்டு தமிழர்கள் 21 பேர் தாயகம் புறப்பட்டனர். அதன்படி 14 பேர் சென்னை வந்தடைந்த நிலையில், எஞ்சிய 7 பேர் கோவை சென்றடைந்தனர். இந்நிலையில் சென்னை வந்தடைந்த 14 பேர் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இஸ்ரேல் போரால் சிக்கி தவிக்கும் எஞ்சிய தமிழர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மீட்கப்பட்ட மாணவர்கள், இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர முதலமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இஸ்ரேலில் இருந்து திரும்பிய 21 பேரில் 12 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.