"ஜாதியை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை"  அமைச்சர் மெய்யநாதன்.

"ஜாதியை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை"  அமைச்சர் மெய்யநாதன்.

"ஜாதியை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை" என தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சார்பில் 'இந்திய பன்பாடு பாரம்பரியம் மற்றும் தொல்லியல், திருக்கோயில் கட்டிட கலை' குறித்து மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கத்தின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் 45 ஆயிரம் திருக்கோவில்கள் உள்ளன. நமது முன்னோர்கள், குறிப்பாக மன்னர்கள் கோவிலின் ஒரு பகுதியில் நந்தவனங்களை ஏற்படுத்தி கோவிலுக்கு தேவையான நறுமண மலர்கள் மட்டுமன்றி ஆக்ஸிசன் அதிக அளவில் வெளியிடும் மரங்களான அரசமரம், ஆலமரம், புங்கை உள்ளிட்ட மரங்களையும் வளர்த்தது மட்டுமின்றி "பால் வடியும் மரங்களை வெட்டக் கூடாது" என்ற ஒரு வாழ்க்கை தத்துவ நியதியையும் ஏற்படுத்தியுள்ளனர். இன்றைக்கு நகரங்களில் காடுகள் அழிக்கப்பட்டாலும் கோவில் நந்தவனங்கள் சுற்று சூழலை காப்பாற்றி வருவதாக கூறினார்.

மேலும், அதிக அளவில் மரங்களை வளர்க்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பசுமை விருது அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இவ்விருது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. இங்கு அழகப்பா பல்கலைக்கழக வளாகத்திலும் ஏராளமான மரங்கள் உள்ளன. விருதுக்கு விண்ணப்பித்தால் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கும் பசுமை விருது வழங்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து, 100 நாடுகளில் தமிழர்கள் உயர் பதவியில் உள்ளனர். இவர்கள் யாரும் ஜாதியினால் இத்தகைய உயர் பதவியில் இல்லை. ஆனால், ஜாதியை தூக்கி பிடிப்பவர்களுக்கு வரலாற்றில் இடம் கிடையாது எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி, கீழடி தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:தமிழ்நாட்டில் உதயமாக இருக்கிறது...! ராயல் என்ஃபீல்டு -ன் முதல் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை ..!