“ காயத்ரி ரகுராமுக்கும் இது பொருந்தும்...” அமைச்சர் பொன்முடி சொன்னது என்ன..?

“ காயத்ரி ரகுராமுக்கும் இது பொருந்தும்...”  அமைச்சர் பொன்முடி சொன்னது என்ன..?

சென்னை பல்கலைக் கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும், தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன் முடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் ஒளிக்கு அறக்கட்டளை நிறுவப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழின் மகத்துவத்தை, மேன்மையை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தமக்கெல்லாம் பெரும் கடமை இருக்கிறது. அப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களே மிகக் குறைவாக இருக்கும். தற்போது ஆண்களுக்கு, பெண்களுக்கென்று தனித்தனி பள்ளிகள் இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பேராசிரியர் பர்வீன் சுல்தானா இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார். கல்வியே அதற்கு காரணம். பெண் கல்வியை ஊக்குவிப்பதில் திராவிட மாடல் ஆட்சி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் க.பொன் முடி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஒளி அறக்கட்டளை தொடங்கி வைத்து தமிழ் ஒளியின் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழ் வளர்ச்சிக்காக கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தமிழை எப்படி வளர்ப்பது என்று  திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் பெண்கல்வியை, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் திராவிட மாடல் ஆட்சி முனைப்போடு இருக்கிறதென்றும் தெரிவித்தார்.

பெண்கள் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிற அரசு தி. மு.க அரசு என்றும், பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தி உறுதி செய்வதில் காவல் துறையை சீர்படுத்துவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது என்றும், பா.ஜ.வில் இருக்கும் அண்ணாமலை ஏற்கனவே காவல் துறை அதிகாரியாக இருந்தவர் அவரைப் பற்றியும் அவர் செய்த செயல்கள் பற்றியும் தாம் அறிந்தது தான். அப்படிப் பட்ட கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று காயத்ரி ரகுராம் கூறுவது ஒன்றும் பெரிதில்லை என்றும் கூறினார்.

மேலும், காயத்ரி ரகுராம் - தி. மு.க வில்  இணைய விரும்பினால் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏற்று பின்பற்றி யார் தி. மு.க விற்கு வந்தாலும் அவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். காயத்ரி ரகுரா முக்கும் இது பொருந்தும். தங்கள் கொள்கைகளை பின்பற்றுவோரை தி. மு.க தலைமை ஏற்றுக்கொள்ளும். தங்கள் முதல்வர் ஏற்றுக்கொள்வார் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : 4 - வது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்...! நிரந்தர பணி வழங்கக் கோரிக்கை...!