3 ஆண்டுகள் கழித்து அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம்...!

3 ஆண்டுகள் கழித்து  அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம்...!

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த மோட்டார் வாகன் திருத்தச் சட்டம்:

கடந்த 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் பல மாநிலங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை கடந்த வாரம்  தமிழக அரசு வெளியிட்டது. தொடர்ந்து, புதிய அபராத தொகையை வசூலிப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

அதன்படி, முதல் முறை விதிமீறலில் ஈடுபடுவோரிடம் ஒரு அபராதமும், அதே விதிமீறலில் 2வது முறை ஈடுபடுவோரிடம் கூடுதல் அபராதமும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், அதே விதிமீறலில் இரண்டாவது முறை ஈடுபடுவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்:

இதையடுத்து சென்னையின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சீட்பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். 

புதிய சட்டத்திற்கு ஒத்துழைப்பு வேண்டும்:

இதனிடையே, போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக நந்தனம் சிக்னலில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் சக்திவேல், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா சென்னையை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.  

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com