கோபத்தால் பறிபோன இரு பச்சிளங்குழந்தைகளின் உயிர்.....

கோபத்தால் பறிபோன இரு பச்சிளங்குழந்தைகளின் உயிர்.....

குடும்பம் நடத்த வராததால் விரக்தியடைந்த இளைஞர் ஒருவர், மனைவியை குடும்பத்தோடு தீ வைத்து எரித்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.  வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வார்த்தையை பின்பற்றாத படுபாதகன் செய்த இழிசெயல் இதோ.. 

கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் - தமிழரசி தம்பதி.  8 மாத பெண் குழந்தையை பெற்றெடுத்த இவர்கள் எந்த வித தகராறும் இல்லாமல் இல்வாழ்க்கையை சுமூகமாக கழித்து வந்தனர்.  இந்நிலையில் தமிழரசியின் சகோதரி தனலட்சுமிக்கு, சிதம்பரத்தைச் சேர்ந்த சத்குரு என்பவருடன் காதல் உண்டானது. 

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை மீறி சத்குருவை திருமணம் செய்த தனலட்சுமி, வெளியூரிலேயே வசித்து வந்தார்.  ஆனால் திருமணத்துக்கு பின்புதான் சத்குருவின் குணநலன் தனலட்சுமிக்கு தெரியவந்தது. 

நாள்தோறும் குடித்து விட்டு குடும்பத்தைக் கவனிக்காததாலும், வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்ததாலும் வேதனையடைந்ததார் தனலட்சுமி.  இதைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு கணவனிடம் கோவித்துக் கொண்ட தனலட்சுமி, செல்லாங்குப்பத்துக்கு சென்று தாய் செல்வி, அக்கா தமிழரசி ஆகியோருடன் வசித்து வந்தார். 

பல மாதங்களாக தன்னை தேடி வராததால் ஆத்திரமடைந்த சத்குரு, மனைவியை அழைத்து செல்வதற்கு மீண்டும் சென்றுள்ளார். காலை 10 மணியளவில் வீட்டுக்கு மதுபோதையில் வந்த சத்குருவிடம் தனலட்சுமியையும், குழந்தையையும் அனுப்ப முடியாது என தமிழரசி சொல்லவே, இருவருக்கும் இடையே தகராறு எழுந்தது.  

இதனால் ஆத்திரமடைந்த சத்குரு, தன் மீது பெட்ரோலை ஊற்றி விட்டு தற்கொலை செய்வதாக மிரட்டியுள்ளான். ஆனால் போதையில் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறியவன், மாமியார் செல்வி, மனைவி தனலட்சுமி, அவரது சகோதரி தமிழரசி, மற்றும் 2 பச்சிளம் குழந்தைகள் மீது டீசலை  ஊற்றி தீயை பற்ற வைத்தான். 

கண்முன்பு 4 பேரும் தீயில் எரிவதை பார்த்த சத்குரு, தன் மீதும் டீசல் ஊற்றி தீ வைத்து கொண்டான். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயற்சிப்பதற்குள், செல்வி, தமிழரசி இவர்களுடன் 2 பச்சிளம் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் சத்குருவும், தனலட்சுமியும் 50 சதவீத தீக்காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் சத்குருவும் பலியானார். மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக மனைவியின் குடும்பத்தை தீ வைத்து கொளுத்திய சம்பவத்தால் கடலூர் நகரமே கலங்கிப் போயுள்ளது. 

இதையும் படிக்க:  பிறந்த குழந்தை பேசியது உண்மையா.... மருத்துவர்கள் கூறியது என்ன?!!