நிதி ஒதுக்கீட்டிலும் அரசியல் செய்யும் மத்திய அரசு!!! குற்றஞ்சாட்டிய பிடிஆர்!!!
நிதி ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் நியாயவிலைக் கடை மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதற்கு நிதி ஆதாரங்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை, 2013ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், தேர்தல் ஆணைய கடிதத்துக்கும் முரண்பாடாக இருப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்வது தெளிவாக தெரிவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட இரு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்று திறக்கப்படும் நிலையில் மற்றொன்று இன்னும் கட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் செயல்பட்டு வருகிற திட்டங்களை மத்திய அரசு பெயர் மாற்றி வருவதாக குற்றம் சாட்டிய அவர், பிரதமரின் பெயரை வைக்க வேண்டும் என்பதற்காக திட்டத்தின் முதல் ஆண்டில் 60 சதவீத பங்குத்தொகையை மத்திய அரசு வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார். 2-வது ஆண்டில் 40 சதவீதம், 3 ஆம் ஆண்டில் 20 சதவீதம் என படிப்படியாக நிதியை குறைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அரசியல் செய்யவே மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியினை ஒதுக்கீடு செய்வதாகவும், மக்கள் நலனுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.