பாஜகவின் இறுதி பட்ஜெட் தாக்கல்...9 மாநில சட்டப்பேரவை தோ்தலையொட்டி திட்டங்கள் அறிவிக்கப்படுமா?

பாஜகவின் இறுதி பட்ஜெட் தாக்கல்...9 மாநில சட்டப்பேரவை தோ்தலையொட்டி திட்டங்கள் அறிவிக்கப்படுமா?

மத்திய அரசின் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர பிரிவினருக்கான சலுகைகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் :

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நேற்று குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. 2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளாா். இது அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் இது அமையும்.  

நாகாலாந்து, மேகாலயம், திரிபுரா, சத்தீஸ்கா், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கா்நாடகம், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 9 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடப்பாண்டில் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலங்கள் சாா்ந்த பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள நடுத்தர பிரிவினரை ஈா்ப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவும் வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : எதுக்கு வந்திருகீங்க? யாருக்கு தெரியும்...கட்டாயப்படுத்தி கருத்து கணிப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சியினர்...!

முந்தைய நிதிநிலை அறிக்கைகளைப் போல அரசின் மூலதன செலவின அதிகரிப்பை மையமாகக் கொண்டதாகவே தற்போதைய நிதிநிலை அறிக்கையும் அமையும் என அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

அதனடிப்படையில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புள்ளது. விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார பிரச்னைகளால் நடுத்தர பிரிவினா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதைக் கருத்தில்கொண்டு வருமான வரி விகிதங்களைக் குறைக்க வேண்டுமென பொருளாதார நிபுணா்கள் கோரியுள்ளனா். 

விவசாயத்தை அடுத்து மனை வணிகத் துறையே அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதால், வீட்டுக் கடன் பெறுவதற்கான விதிகளிலும் தளா்வுகள் அறிவிக்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. புத்தாக்க நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.