ஆன்லைன் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதலா? ஆளுநரை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சொன்னது என்ன?

ஆன்லைன் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதலா? ஆளுநரை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சொன்னது என்ன?

ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவியை, சட்டத்துறை அமைச்சர் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

ஒப்புதல் வழங்காத ஆளுநர்:

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை.

மாநில அரசுக்கு கேள்வி:

ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கத்தை அரசிடம் கேட்டிருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் ஆளுநர் குறிப்பிட்டிருந்ததார்.

விளக்கம் அளித்த மாநில அரசு:

ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆர். என்.ரவி ஆய்வு செய்துவருகிறார். இந்நிலையில், ஆன்லைன் சட்ட மசோதா தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று 11மணியளவில் ஆளுநர் ஆர். என்.ரவியை சந்திக்க இருப்பதாக தக்வல் வெளியானது. மேலும் இந்த சந்திப்பின்போது, ஆன்லைன் சூதாட்டத்தின் தடை சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாகவும், உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் குறித்த அறிக்கைக்குப் பிறகே சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டே கொண்டு வரப்பட்டது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இதையும் படிக்க: அண்ணாமலையின் குற்றச்சாட்டு...ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன?

ஆளுநரை சந்தித்த ரகுபதி:

அதன்படி, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க ஆளுநர் ஆர். என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்து பேசினார். அரைமணி நேர சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஆளுநரிடத்தில் சட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளதாகவும், சட்டத்தில் சில சந்தேகங்கள் உள்ளது அதனை தெளிவுப்படுத்திக்கொண்டு விரைவில் ஒப்புதல் வழங்குவதாக ஆளுநர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு நிறைவேற்றிய 21 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் உள்ளதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால நிர்ணயம் ஏதும் இல்லாததால் அதுகுறித்து கேள்வி எழுப்ப முடியாது என கூறினார்.

மேலும் அவசர சட்டத்துக்கு ஏன் அரசாணை பிறப்பிக்கவில்லை என கேட்டதற்கு, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அதனை அரசிதழில் வெளியிடப்பட்டதாகவும், அவசர சட்டத்திற்கான சட்ட திட்டங்கள் வகுக்க துவங்கிய நேரத்தில், சட்டப்பேரவை கூடுவது தொடர்பான அறிவிப்பு வந்ததால் அரசாணை பிறப்பிக்கவில்லை என ஆளுநர் பதிலளித்ததாகவும் ரகுபதி கூறினார்.