முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு; ஆளுநருக்கு அதிகாரம் இல்லை...ஆர்.என்.ரவிக்கு கனிமொழி பதிலடி!

முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு; ஆளுநருக்கு அதிகாரம் இல்லை...ஆர்.என்.ரவிக்கு கனிமொழி பதிலடி!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்து முதலமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கவனித்து வந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்புகளாக வழங்கி, அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பினார். 

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சரின் கடிதம் தவறாக வழிநடத்துவதாக இருப்பதாக கூறி அமைச்சரவை மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்காமல் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த செயல்பாட்டிற்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில், அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக  இருக்கும் உங்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும் எனவும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com