மணிப்பூர் அமைதி திரும்ப ஆளுநரை சந்திக்கிறார் கனிமொழி!

மணிப்பூர் அமைதி திரும்ப ஆளுநரை சந்திக்கிறார் கனிமொழி!

மணிப்பூர் மாநில விவகாரம் குறித்த விவாதத்திற்கு பிறகு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என நம்புவதாக திமுக நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் இரு வேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது. இதனால் அப்பகுதியில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், கடந்த மே 4 ஆம் தேதி ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினரின் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும், அந்த பெண்களை அழைத்து சென்ற கும்பல் அவர்களை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டது. 

இதையும் படிக்க : 7வது நாள் முடக்கம் : "மக்கள் பிரச்னை குறித்து பேச முடியாத நிலை ஏற்படும்" - தமிழிசை

இதையடுத்து, மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப் பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றுக்கூறி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் முடங்கி வருகிறது.

இந்நிலையில் கலவர பூமியாக காட்சி அளிக்கும் மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக எதிர்கட்சி கூட்டணியினர் மணிப்பூர் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திமுக எம். பி. கனிமொழி, மணிப்பூர் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உங்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும்,உங்களுக்காக நாங்கள் போராடும் என்று கூற இருப்பதாக கூறினார். மேலும், மணிப்பூர் ஆளுநரை சந்திக்க அனுமதி கோரி உள்ளதாகவும், மணிப்பூர் மாநில விவகாரம் குறித்த விவாதத்திற்கு பிறகு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என நம்புவதாகவும் கனிமொழி எம். பி. கூறினார்.