மீண்டும் கொரோனா அலை... “பாதுகாப்பான நிலையில் தான் தமிழகம்..” - அமைச்சர் மா.சு

மீண்டும் கொரோனா அலை... “பாதுகாப்பான நிலையில் தான் தமிழகம்..” - அமைச்சர் மா.சு

கன்னியாகுமரியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வந்தடைந்தார். 

பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதலமைச்சர் ஆராய்ந்தார். தமிழக முதலமைச்சர், வெளிநாடுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் அதிகரித்து கொண்டிருக்கும் காரணத்தினால், அந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார். குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களை 2% ரேண்டம் முறையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வந்தால் அவர்கள் பரிசோதனை செய்யப்பட உள்ளனர். குறிப்பாக, கோவை, மதுரை திருச்சி, சென்னை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் இன்று முதல் பரிசோதனை அமைக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆறு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. படுக்கைகளை பொருத்தவரை, கொரோனாவிற்கென்று ஏற்கனவே ஏற்பாடு செய்த படுக்கைகள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது, கடந்த அலையின்போது முதலமைச்சர், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை கூடுதலாக, தமிழகத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள், தமிழ்நாடு முழுவதிலும் திறந்து வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கான  பிரத்தியேக படுக்கைகளும் உள்ளது. மேலும், ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, ஜெனரேட்டர், சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. தடுப்பூசி  முதல் தவணை 96 சதவீதம், இரண்டாவது தவணை 92 சதவீதம்  செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெரிய அளவில் பாதிப்பு இல்லை, மேலும், ஆங்காங்கே  ஒவ்வொரு நாளும் 40, 50 பேர் உயிரிழந்து கொண்டிருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 6 மாத காலமாக இழப்பு ஏதும் இல்லாத நிலை என்பது தொடர்ச்சியாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் ஒற்றை இலக்கங்களில் தான் பாதிப்பு பதிவாகி வருகிறது. மேலும், நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது, எனவே மிக பாதுகாப்பான நிலையில் தான் தமிழகம் உள்ளது. தொடர்ந்து மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்புக்காக முகக் கவசங்கள் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்தால் நல்லது. கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என கூறினார்.

இதையும் படிக்க : ‘ பிஎஃப் 7 ’ வைரஸ்... சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தும் மத்திய சுகாதார அமைச்சர்..