சிறந்த அரசு மருத்துவமனை: முதலிடத்தில் ராஜீவ் காந்தி மருந்துவமனை

சிறந்த அரசு மருத்துவமனை: முதலிடத்தில் ராஜீவ் காந்தி மருந்துவமனை

10 மாதங்கள் தொடர்ந்து முதலிடம்

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநகரம் சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின்  பட்டியலை மாதம் தோறும் வெளியிடுகிறது. இந்த பட்டியலின் படி தமிழ்நாட்டில் தொடர்ந்து பத்து மாதங்களாக முதலிடம் பிடித்துள்ள மருத்துவமனையாஎ ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை விளங்குகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்குவதை சில தர அளவுகோல்களை நிர்ணயித்து கணக்கீடு செய்கிறது தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம். அந்த அடிப்படையில்  கடந்த 2022  ஏப்ரல் மாதத்திலிருந்து அரசு  ராஜிவ் காந்தி மருத்துவமனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும்  முதலிடம் வகித்து வருகிறது.

 தர மதிப்பீடு 

மருத்துவமனையில் உள்ள துறைகளின் எண்ணிக்கை,  பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, படுக்கை வசதிகள், ஒருநாளைக்கு நடைபெறும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை , உயிரிழப்பு  ஆகிய அனைத்து காரணிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டே இந்த தர மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவனையை பொறுத்தவரை இங்கு மொத்தம் 34 துறைகள் உள்ளன. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10,000 பேர் முதல் சில நாட்களில் 16,000 பேர் வரை கூட புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 2500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதயவியல் துறை உள்ளிட்ட முதன்மையான துறைகளில் மட்டுமே ஒருநாளைக்கு 66 அறுவை சிகிச்சைகளும், சாதாரண அறுவை சிகிச்சைகள் 37 , அவசர அறுவை சிகிச்சைகள் 30 என ஒருநாளின் சராசரியாக 130  அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. 

மேலும் படிக்க | அதிமுக கூட்டணி தர்மத்தை மதிக்காமல் தேர்தலை சந்திக்கிறது - நேரடியாக தாக்கும் அமைச்சர்

புற்றுநோய்க்கான கீமோ சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை  மட்டுமே தினசரி 50 என்பது குறிப்பிடத்தக்கது. 113 பேருக்கு ஒருநாளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் இடமாக 24 மணி நேரமும் டயாலிசிஸ் யூனிட் இங்கு செயல்பட்டு வருகிறது. 

1500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்

1500 க்கும் மேற்பட்ட மருத்துவர்களைக் கொண்டு இயங்கும் தமிழகத்தின் ஒரே அரசு  மருத்துவமனை இது என்பதால் முதலிடம் பிடித்ததில் என சிறப்பு என்ற கேள்வி எழலாம். தர வரிசை கணக்கீடு வெறும் சிகிச்சை பெற்றுவோரின் அதிக எண்ணிக்கையை பொறுத்தது மட்டுமல்ல. குறைந்த மருத்துவர்களை கொண்டிருக்கும் மருத்துவமனை கூட அரசு கொடுத்திருக்கும் மருத்துவக் கட்டமைப்பிற்கு ஏற்ப நோயாளிகளை பலன் பெறச் செய்திருந்தால் இந்த தர வரிசைப் பட்டியலில் கட்டாயம் முதன்மை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.