பணத்துக்காக முதலாளியை கொலை செய்த ஊழியர்...!

Published on

சேலத்தில் முதலாளியை கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பியோட முயன்ற முன்னாள் ஊழியரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். சீலநாயக்கன்பட்டியில் கடந்த 8 ஆண்டுகளாக பழைய வாகனங்களை வாங்கி உடைத்து, விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரிடம் முனியப்பன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முனியப்பனை வேலையில் இருந்து அன்பழகன் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் கடையில் தனியாக இருந்த அன்பழகனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ஒரு லட்சம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதனை கண்ட சக ஊழியர்கள் அவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து கொலை செய்த முனியப்பனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com