போலி அடையாள அட்டையுடன் சிக்கிய நபர்...குண்டு கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை..
அனுமதியின்றி முதலமைச்சரை நெருங்க முற்பட்ட சிறைத்துறை காவல் அதிகாரி தமிழ்நாடு காவல்துறையின் போலியான அடையாள அட்டை வைத்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி அடையாள அட்டையுடன் சிக்கிய நபர் :
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் மாளிகையில் புதிதாக பதவிகள் வழக்கப்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சஃபாரி உடையில் மேடையில் ஏற முற்பட்ட ஒருவரை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் யார் எனக் கேட்டபோது சிறைத்துறை அதிகாரி என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த நபரை அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தேனாம்பேட்டை போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது தமிழ்நாடு காவல்துறையின் போலியான அடையாள அட்டையை அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரையும், அவருடன் வந்தவரையும் தேனாம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (42) என்பதும், அவர் பொள்ளாச்சி கிளைச் சிறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
கைது செய்த காவல்துறை :
மேலும், நேற்று விடுமுறை என்பதால் வசந்தகுமார் தனது நண்பர் நாட்ராயன் என்பவருடன் கோவையில் இருந்து 6.15 மணிக்கு கிளம்பி சென்னைக்கு விமானம் மூலம் 8.30 மணிக்கு வந்துள்ளார். பின்னர் திமுக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சரை அவரது வீட்டில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் வருவதை அறிந்து அங்கு வசந்தகுமார் தனது நண்பருடன் வந்து, நண்பர் நாட்ராயனை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு முதல்வரை நெருங்க முற்பட்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையின் போலியான அடையாள அட்டை வைத்திருந்த சிறைத்துறை அதிகாரியான வசந்த குமார் மீது தேனாம்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.