முன்னாள் துணை முதலமைச்சர் காமாலை கண்ணோடு இந்த விவகாரத்தைப் பார்க்கிறார்.! -அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டு.! 

முன்னாள் துணை முதலமைச்சர் காமாலை கண்ணோடு இந்த விவகாரத்தைப் பார்க்கிறார்.! -அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டு.! 
 
அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும், முன்னாள் துணை முதலமைச்சர் இதனை காமாலை கண்ணோடு பார்ப்பதாகவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
சென்னை கே.கே.நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இணைந்து 1000 மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
 
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு, ஊரடங்கால் மக்கள் எந்தவகை யிலும் பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றும், 5 ஆயிரம் தள்ளுவண்டிகள், 2 ஆயிரம் குட்டியானை வண்டிகள்  மூலம் காய்கறி, பழம் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
 
மேலும் வியாபாரிகள் இதுபோன்று விற்பனை செய்ய முன்வந்தால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர், கொரோனா காலத்தில் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, மனிதாபிமானத்தோடு குறைந்த விலையில் காய்கறி உள்ளிட்டவை கிடைக்க இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்யாத வண்ணம் கண்காணிப்பு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், எழுப்பூர் ரயில் நிலையத்தில் 200க்கும் மேற்பட்டோர் வீடு செல்ல முடியாமல் தவித்த போது, மாநகராட்சி சார்பில் உடனடி நடவடிக்கை அவர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறிய அவர் அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் மாநகராட்சி ஆணையர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும், முன்னாள் துணை முதலமைச்சர் இதனை காமாலை கண்ணோடு பார்ப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.