தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம் திட்டமிடாத ஒன்றிய அரசே.! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.! 

தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம் திட்டமிடாத ஒன்றிய அரசே.! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.! 

ஒன்றிய அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஆட்சியர், கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "மதுரையில் கொரோனோ தொற்று குறைய தொடங்கியது இயற்கையாக நடக்கவில்லை,  விஞ்ஞான ரீதியாக திட்டமிட்ட தடுப்பு நடவடிக்கையால் கொரோனோ குறைய தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனோ  தொற்று புறநகரில் பரவி இருந்தால் சமாளிக்க முடியாத அளவிற்கு நிலைமை கையை மீறி சென்று இருக்கும்.மதுரை மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து பணியாற்றினார்கள், மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கோரோனோ பாதிப்பை  மிக வேகமாக கட்டுப்படுத்த முடியும்" எனக் கூறினார். 

மேலும் "முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கொரோனோ இறப்பு குறித்து தகவல் இருந்தால் எங்களிடம் வழங்கலாம். அதிமுக ஆட்சி காலத்தில் இறப்புகள் மறுக்கப்பட்டது குறித்து நான் வழக்கு தொடர்ந்தேன்.அதிமுக ஆட்சி காலத்தில் 1500 இறப்புகளை மறைத்து 200 என கூறினார்கள்,
சில தவறுகளில் இருந்து தான் சரியான பாதைக்கு செல்ல முடியும், 


தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது, அமெரிக்காவில் 8 கோடி தடுப்பூசி கூடுதாலக உள்ளது, 8 கோடி தடுப்பூசியில் 4 கோடி தடுப்பூசியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் மேலாண்மை குறைவு காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை, தமிழகத்தில் நிரந்தரமாக மருந்து தயாரிப்பு ஆலைகளை திட்டமிட்டு உள்ளோம்" எனக் கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர் "மதுரையில் அரசியல், கட்சி பாகுபாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட கொரோனோ தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் தடுப்பூசி தட்டுப்பாடு இருந்து வருகிறது. உலக அளவில்  மருத்துவ உற்பத்தியில் சிறந்து விளங்கும், இந்தியாவில் கொரோனோ தடுப்பூசி உற்பத்தி செய்ய  மத்திய  அரசு உரிய ஊக்கம் கொடுக்காமல் ஏற்றுமதி செய்தது ஒன்றிய அரசின் திட்டமிடுதலில் தகுதியின்மையை காட்டுகிறது

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து மற்றும் கொரோனோ தடுப்பூசியை வெளி நாடுகளிலிருந்து  கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. மருந்து உற்பத்தி  நிறுவனங்களை  தமிழகத்தில் கூடுதலாக அமைக்க வரும் மத்திய பட்ஜெட்டில் வலியுறுத்தப்படும்

மாநிலங்கள் எல்லாம் ஒன்றிணைந்தது தான் ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களையும் கட்சி பாகுபாடின்றி பார்க்க வேண்டும், ஒன்றிய அரசு மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஜனநாயகத்தில் சட்டம் இருக்கு, பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என அரசியல் செய்ய கூடாது, இதில் யாரும் அரசியல் செய்ய கூடாது, அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு ஒரே மாதிரியாக சமமாக பார்க்க வேண்டும்" என கூறினார்.