கும்பகோணத்தில் தடுப்பூசி போட காத்திருந்த பெண் உயிரிழந்த சோகம்...

கும்பகோணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் தடுப்பூசி போட காத்திருந்த பெண் உயிரிழந்த சோகம்...

தமிழகத்தில் கொரொனோ தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் படையெடுப்பதால் பல மாவட்டங்களில் மருந்து இல்லாமல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசியை கண்டாலே தெறித்து ஓடிய தமிழக மக்கள் தற்போது நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்தி கொள்கின்றனர்.

இந்த நிலையில், கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக காத்துக்கொண்டிருந்த வள்ளிக்கண்ணு(40) என்ற பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு மையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டதால் காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உள்ளனர்.  கிட்டத்தட்ட 3 முதல் 5 மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், வள்ளிக்கண்ணும் காலை 7 மணி முதல் வரிசையில் காத்துக் கொண்டிருந்துள்ளார். நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.