கொரோனாவுக்கு தாய் தந்தை பலி.... அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இரட்டைச் சிறுமிகள்
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், கொரோனா பாதித்த 5 வயதே ஆன இரட்டையர்கள் அதிர்ஷ்டவசமாக தொற்றிலிருந்து மீண்டு பலருக்கும் நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
போபோலை சேர்ந்த இந்த இரட்டை சகோதரிகளை தற்போது அவர்களது தாய் வழி பெற்றோர் கவனித்து வருகின்றனர்.
இந்த குழந்தைகள் உட்பட அவர்களது பெற்றோர்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தொற்று பாதித்துள்ளது. இதில் நோயின் தீவிரம் காரணமாக குழந்தைகளின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மற்ற மூவரும் வீட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், குழந்தைகளின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவன் இறந்த அதிர்ச்சி காரணமாக குழந்தைகளின் தாயும் உயிரிழந்தார்.
ஆனால் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அவர்களை அவர்களது தாத்தா- பாட்டி கவனித்து வரும் நிலையில், மருத்துவர் மற்றும் போலீஸ் அதிகாரியாக விரும்பும் அக்குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மற்றும் ம.பி முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.